ஈரோடு: அவதூறு வழக்குகள் தொடர்பாக பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று ஈரோடு கோர்ட்டில் ஆஜரானார். தமிழகத்தில் தந்தை பெரியார் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று பேசிய, பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் குமரகுருபரன் ஈரோடு டவுன் போலீசில் கடந்த 2018ம் ஆண்டு புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜும், இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியதாக அறநிலையத்துறை ஊழியர்களும் உள்பட மொத்தம் 5 அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஈரோடு முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வழக்குகளில், எச்.ராஜா நேற்று கோர்ட்டில் ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வடிவேல் வரும் 21ம் தேதி வழக்கை ஒத்திவைத்தார்.